Monday, March 14, 2011

கவிதைகள்

இரு பெண்கள்

மழை பெய்து
நெகிழ்ந்த நிலமென
தளர்ந்து கிடக்கிறது உன்னுடல்
தண்ணிய வேர்களை அவசரமேதுமின்றி
கைகளில் ஏந்திக் கொள்கிறாய்

நத்தையூர்வது போல
ஆள் காட்டி விரல்
ஊர்கையில்
நடுங்குகிற உதடுகள்

சுருண்டு படர்ந்த கூந்தலில்
மறைந்த முதுகெலும்பு
சர்ப்பம் போல நெளிகிறது

இலவங் காய்களென 
நீண்ட விரல்கள் படர்கையில்
கூழாங்கற்களின் குளிர்ச்சி

நாம் காதல் கொண்ட போது
மென்னிருள் படர்ந்த
வனத்தில் பூக்கள் மலரக் கனாக் கண்டேன்

அதிகாலையில்
துயிலெழுகையில்
உதிர்ந்து கிடக்கும் மலர்களும்
ஆற்றங் கரையோரம்
அரவூர்ந்த தடயமும்.